கட்டுகஸ்தோட்டை, மாவில்மட பகுதியில் கிரைண்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரம் கழுத்தில் பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாவில்மட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) காலை அவர் தனது வீட்டின் முன்புறம் உள்ள பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் தனியாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
வேலியைப் பழுதுபார்ப்பதற்காக அவர் கிரைண்டர் (Grinder) இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது, எதிர்பாராதவிதமாக அது அவரது கட்டுப்பாட்டை மீறி கழுத்துப் பகுதியைத் தாக்கியுள்ளது.
இதில் கழுத்து அறுபட்டுப் பலத்த காயமடைந்த அவர், அதிக இரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













