கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராக்வில் (Brockville) பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒண்டாரியோவின் பிராக்வில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில், கார்டியர் கோர்ட் (Cartier Court) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் மூன்று பேர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டெடுத்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த 17 வயது சிறுவனைப் பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்டவர்களுக்கும், கைது செய்யப்பட்ட சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்ததாகவும், இது தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“இந்த விசாரணை மிகவும் உணர்வுப்பூர்வமானது மற்றும் சிக்கலானது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாங்கள் உணர்கிறோம்” என பொலிஸார் தங்களது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கனடாவின் ‘இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ (Youth Criminal Justice Act) கீழ் அந்தச் சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது என்பதால், பெயர் விபரங்களை பொலிஸார் ரகசியமாக வைத்துள்ளனர்.
















