ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் அது தொடர்பான பின்னணிகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:
கபில சந்திரசேன திடீரென மரணமடைந்த விதம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
கபில சந்திரசேன நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவருக்குப் பிணை வழங்குவதற்காக முன்வந்த நபர்கள் யார் என்பது குறித்தும் சந்தேகம் நிலவுகிறது.
குறித்த பிணையாளர்களை கபில சந்திரசேனவுக்கு அறிமுகப்படுத்தியது இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மறைந்துள்ள உண்மைகளைக் கண்டறிய நீதிமன்றம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பிணை வழங்கிய நபர்களுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாகப் பல்வேறு விசாரணைகளுக்கு முகம் கொடுத்திருந்த கபில சந்திரசேனவின் திடீர் மரணம், தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.















