தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கியிருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் விஜய் ஆட்சியமைக்க இன்னும் இரண்டு பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் வி.சி.க, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.
இதனையடுத்து இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுமே ஆதரவுக் கடிதங்களை அளித்துள்ளன.
இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.
இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களை கொண்ட விசிக இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் விஜய் சென்று நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
















