மேற்கு வங்கத்தில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்ட்டாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கஷ்மீரா ஷேக். ஜரி தொழில் செய்து வருகிறார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது வங்கிக்கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியம் வந்து சேர்ந்துவிட்டதா என அறிய விரும்பினார்.
எனவே தனது வங்கிக் கணக்கு இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்க்குமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார்.
அவரும் சரிபார்த்த போது கஷ்மீரா கணக்கில் ரூ. 99,99,99,997 இருந்துள்ளது.
அதாவது 100 கோடி ரூபாய்க்கு 3 ரூபாய் குறைவாகும்.
இதையறிந்த வங்கி உயரதிகாரிகள் உடனடியாக அவரின் வங்கி கணக்கை முடக்கினர்.
மேலும் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

















