மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுதெனிய பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் நேற்று (13) இரவு இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அது வன்முறையாக மாறியுள்ளது.
இதன்போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் அடிப்படையில், சம்பவம் நடந்ததாகக் கருதப்படும் வீட்டின் காவலாளி மற்றும் மற்றொரு நபர் என இருவரைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு நேரில் சென்ற மாத்தளை நீதவான், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பகையினால் இந்த மோதல் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














