மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மோதல் காரணமாக, விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் ஐரோப்பாவிற்கான விமானக் கட்டணங்கள் உயருவது உறுதி என சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் வில்லி வால்ஷ் (Willie Walsh) தெரிவித்துள்ளார்.
சில விமான நிறுவனங்கள் தற்போது கேள்விக் குறைவு காரணமாகக் கட்டணங்களைக் குறைத்திருந்தாலும், எரிபொருள் விலையேற்றத்தின் சுமையை நீண்ட காலத்திற்குத் தாங்க முடியாது என வால்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) நாளை திறக்கப்பட்டாலும், அதன் பாதிப்புகள் அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என அவர் கணித்துள்ளார்.
பிரித்தானியாவில் கோடைக்காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விமானப் போக்குவரத்து 25% அதிகரிக்கும்.
இதற்கேற்ப மாற்று எரிபொருள் ஆதாரங்களைக் கண்டறியாவிட்டால், உச்சக்கட்டப் பயணக் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஐரோப்பா மற்றும் பிரித்தானியா ஆகியவை இந்தப் பிராந்தியத்தின் இறக்குமதியையே அதிகம் நம்பியுள்ளன.
தட்டுப்பாட்டைத் தவிர்க்க அமெரிக்கத் தரத்திலான விமான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்கம், வரும் மாதங்களில் சர்வதேச பயணங்களைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














