முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான ஊழல் வழககை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காகவே செப்டம்பர் 07-ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைக்க நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சட்டரீதியான அடிப்படை இல்லை எனத் தமது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
எனினும், மேல் நீதிமன்றம் அந்த ஆட்சேபனைகளை நிராகரித்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானித்தது.
மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.














