நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசு சேவைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் இன்று (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போதே அதிகாரிகள் இத்தகவல்களை வெளியிட்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் ஆலோசனைகள் வருமாறு:
தற்போது நடைமுறையிலுள்ள வாகன இலக்கத் தகடுகளின் ஒற்றை மற்றும் இரட்டை (Odd-Even) முறையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
முற்றிலும் QR குறியீட்டின் கீழ் மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கும், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் ஊடாக மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மின்சாரத்தை நிலையான முறையில் சேமிக்கும் வீடுகளைத் தெரிவு செய்து மாணவர்களை மதிப்பீடு செய்தல் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
எதிர்கால கட்டுமானத் திட்டங்களின் போது ‘பசுமை கட்டிடம்’ (Green Building) எனும் புதிய சூழல்நேய எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.















