களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் முறையான விசா அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து கணினி குற்றங்களில் ஈடுபட்ட 14 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் அனைவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 சீன நாட்டு ஆண்கள், ஒரு மலேசிய நாட்டு ஆண், இரண்டு சீன நாட்டுப் பெண்கள் மற்றும் ஒரு மலேசிய நாட்டுப் பெண் ஆகியோர் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அந்த ஹோட்டல் வளாகத்தினுள் பாரிய அளவிலான சர்வதேச கணினி குற்றச்செயல்களை (Cybercrimes) முன்னெடுப்பதற்கான பிரதான மத்திய நிலையம் (Main Hub) ஒன்றின் ஆரம்பக்கட்ட நிர்மாணப் பணிகள் அதிநவீன உபகரணங்களுடன் முன்னெடுக்கப்பட்டு வந்தமையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சட்டபூர்வமான ஒரு தனியார் வணிக நிறுவனம் (Private Business) என்ற பெயரில் தங்களைப் பதிவு செய்துகொண்டு, அதன் பின்னணியில் இந்த பாரிய கணினி மற்றும் நிதி மோசடி வலையமைப்பை இலங்கையில் இருந்து இயக்க இவர்கள் திட்டமிட்டிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த மேலதிக விசாரணைகளைக் களுத்துறை வடக்கு பொலிஸாரும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.













