பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் நீதிமன்றத்திற்குள் கொலை செய்வதற்குத் துணைபோனமை மற்றும் அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறைக்குள், சிறைச்சாலை அதிகாரிகளினால் கணேமுல்ல சஞ்சீவ ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது, சட்டத்தரணி ஒருவரைப் போல் கறுப்பு அங்கி அணிந்து தோற்றமளித்து வந்த நபரொருவரால், நீதிமன்ற அறைக்குள்ளேயே அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் வழங்கிய திடுக்கிடும் தகவல்களின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கடந்த 13ஆம் திகதி இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் வைத்து ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக் குற்றத்தைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகள் மற்றும் வசதிகளை வழங்கி, இந்த ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ படுகொலைக்கு முழுமையாகத் துணை புரிந்துள்ளார்.
அவர் கைது செய்யப்படும் போது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ரிப்பீட்டர்’ (Repeater) ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 02 மெகசின்கள் (Magazines) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேகநபரைத் தடுத்து வைத்து மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












