டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜீன் மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம் (24) ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபர் முன்னிலை படுத்தப்பட்ட போதே நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களான சந்தேக நபரும் அவரின் மனைவியும் பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொகவந்தலாவ பெற்றோசோ தோட்ட மக்களின் உதவியோடு பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் சந்தேக நபரை முன்னிலை படுத்துவதற்கு முன்பு டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தி வைத்திய அறிக்கைகளையும் நேற்றைய தினம் பெற்றுக்கொண்டனர்.
சந்தேக நபர் பதுளை பசரை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் அணிந்திருந்த தங்க நகைகள் உருதி செய்யப்பட்டதை அடுத்து கொலை இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ. டிவி கேமராவின் கனோளிகளின் உதவியோடு சந்தேகநபரை பொலிஸார் அடையாளம் கண்டனர்.
இந்த நிலையில் சந்தேக நபரிடம் இருந்து தங்கநகைகள் கத்தி மற்றும் இரும்பு ஆயுதமொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
இதனை தொடர்ந்து தம்பதிகளின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றவுடன் நேற்றைய தினம் டிக்கோயா பகுதியில் உள்ள பொதுமையானத்தில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.















