முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்புகளை வழங்குவதை கொழும்பு மேல் நீதிமன்றம் ஜூன் 09 வரை ஒத்திவைத்துள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் பிறப்பித்துள்ளார்.
சரண குணவர்தனாவுக்கு எதிராக தாக்கல் செய்த நான்கு வழக்குகளுக்கான தீர்ப்புகள் இன்று (26) வழங்கப்படவிருந்தன.
எனினும், நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லை என்று நீதிபதி மிஹால் தெரிவித்தார்.
அதன்படி, ஜூன் 09 அன்று தீர்ப்புகளை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில், சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்முதல் செய்ததன் மூலம் குணவர்தன அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி இந்த நான்கு வழக்குகளும் தொடரப்பட்டன.













