வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்மர்தென்ஷையர் (Carmarthenshire) மற்றும் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேபோல், கடந்த வாரமும் பெம்ப்ரோக்ஷையரின் சாண்டர்ஸ்ஃபூட் (Saundersfoot) கடற்கரையில் நடைப்பயிற்சி சென்ற ஒருவரால் இதேபோன்றதொரு சுறா மீன்களின் குவியல் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயற்கை வளங்கள் வேல்ஸ் (Natural Resources Wales) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கூறியதாவது:
“சாண்டர்ஸ்ஃபூட் கடற்கரையில் மீன்கள் இறந்து கிடந்தது தொடர்பாக நாங்கள் நடத்திய விசாரணையில், கடலில் எந்தவிதமான இரசாயனப் மாசுபாடும் (Pollution incident) ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை பொதுவாக மீன்பிடிக்கும் போது தற்செயலாக வலையில் சிக்கும் ‘துணைப் பிடிப்பு’ (By-catch) மீன்களாக இருக்கலாம்.
மீனவர்களுக்கு இவை தேவையில்லை என்பதால் மீண்டும் கடலிலேயே தூக்கி வீசப்பட்டிருக்கலாம்.”
பெம்ப்ரே கடற்கரையில் கண்டறியப்பட்ட வலை, கடலில் தொலைந்துபோன ஒரு மீன்பிடி வலையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கடலலைகளின் சீற்றம் காரணமாகச் சாண்டர்ஸ்ஃபூட் கடற்கரையில் இருந்த பெரும்பாலான சுறாக்களின் உடல்கள் மீண்டும் கடலுக்குள்ளேயே இழுத்துச் செல்லப்பட்டுள்ளதால், தற்போது அங்கு பாதிப்புகள் ஏதுமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசித்திரச் சம்பவம் தொடர்பாகக் கார்மர்தென்ஷையர் மற்றும் பெம்ப்ரோக்ஷையர் உள்ளூராட்சி சபைகளிடம் மேலதிக விபரங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













