இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமறைவாக இருந்த மேலும் 8 முக்கிய குற்றவாளிகள் நேற்று முன்தினம் (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அழைத்து வரப்பட்ட 8 சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர். இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய மற்றும் சாதுரியமான நடவடிக்கையின் மூலமாகவே இவர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர், இலங்கையின் முன்னணி திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் (Underworld Gangs) நெருங்கிய தொடர்புகளைப் பேணி, டுபாயில் இருந்தவாறே இலங்கைக்குள் கொலை மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச் செயல்களை இயக்கியவர்களாவர்.
இவர்களில் இருவர் சர்வதேச மட்டத்திலான மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் (Drug Trafficking) ஈடுபட்ட முக்கிய புள்ளிகளாவர்.
எஞ்சிய மூவரும் இலங்கையில் நிதி மோசடி மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த மே 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 21 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் விசேட பிரிவுகளின் கீழ் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நாட்டில் குற்றங்களைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து கொண்டு, வெளிநாடுகளில் இருந்தபடி இலங்கையில் குற்றச் செயல்களை இயக்கும் எவருக்கும் நாங்கள் இடமளிக்கப் போவதில்லை என்பதை மீண்டும் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறோம்.
கடந்த 2024, 2025 மற்றும் நடப்பு 2026 ஆகிய மூன்று வருட காலப்பகுதிக்குள் மட்டும் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் 32 சந்தேகநபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திர ரீதியாகத் தொடர்புகொண்டு, குற்றங்களுடன் தொடர்புடைய மேலும் 70 சந்தேகநபர்கள் என இதுவரையில் 102 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள, சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள 89 சந்தேகநபர்களையும் சர்வதேச பொலிஸ் மற்றும் அண்டை நாடுகளின் உதவியுடன் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.













