இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டது முதல், தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது வரை நடந்த விடயங்களை சற்று அலசி பார்ப்போம்
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் மிக முக்கிய புள்ளியாக விளங்கியவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே (Suresh Sallay).
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் மிக உயரிய உளவு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் இராணுவ அதிகாரி இவர்.
கடந்த சில மாதங்களாக இவர் மீதான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறையில் இவருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
முதலில் இவர் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து பார்ப்போம் ….
2019 ஆண்டு எனும் போது எல்லோர் கண்முன்னும் வருவது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம்தான் .
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய, 270-க்கும் மேற்பட்ட உயிர்களைப் காவுகொண்ட ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்’ தொடர்பான விசாரணைகளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மீண்டும் தீவிரப்படுத்தியது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகளைக் கண்டறியும் நோக்கில், கடந்த 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி அதிகாலையில், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் வைத்து சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், “சதி செய்தல் மற்றும் குண்டுத்தாக்குதல்களுக்குத் துணை போதல்” ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இவரிடம் விசாரணைகள் இனம்பெற்ற வண்ணம் இருந்தது.
சரி இது எவ்வாறு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த சுரேஷ் சலேவுக்கு, சிறைக்குள் மனிதாபிமானமற்ற முறையிலான சித்திரவதைகளும், அநீதிகளும் இழைக்கப்படுவதாக ஜூன் மாத தொடக்கத்தில் அவரது குடும்பத்தினரும் அரசியல் ஆதரவாளர்களும் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் சலேவின் குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்களின்படி:
அவருக்கு மிகக் குறைந்த அளவிலான உணவே வழங்கப்பட்டதாகவும், அதுவும் தரையில் விரிக்கப்பட்ட செய்தித்தாள் ஒன்றின் மீது வைத்துப் பரிமாறப்பட்டதாகவும் கூறப்பட்டது.
“தன்னை ஒரு நாயை விட மோசமாக நடத்துகிறார்கள்” என்றும், இத்தகைய அவமதிப்புகளைத் தாங்கிக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்றும் சலே தனது மகனிடம் வேதனை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் சுரேஷ் சலே தடுப்புக்காவலுக்குள்ளேயே ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ ஒன்றை ஆரம்பிக்கிறார்.
தமக்கு இழைக்கப்படும் தொடர் மன உளைச்சல், கொடூரமான நடத்தைகள் மற்றும் மருத்துவச் சேவை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜூன் 5 ஆம் திகதி இரவு முதல் சுரேஷ் சலே சிறைக்குள் “சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை” ஆரம்பித்தார்.
அவர் உணவு, நீர் மற்றும் மருந்துகள் எதையும் உட்கொள்ள மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 7 ஆம் திகதி சலேவின் மனைவி மனோரி சலே, பொலிஸ்மா அதிபருக்கு (IGP) அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், தன் கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், இது குறித்து சுயாதீன குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.
மேலும், நிலைமை மோசமடைந்ததால், தனது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும், கண்களைத் தானம் செய்வதற்கான ஆவணங்களைச் தயார் செய்யவும் சலே தனது சட்டத்தரணிகளுக்கு அவசர விடுக்கோள் விடுத்தார்.
இதை அடுத்து தொடர் உண்ணாவிரதம் காரணமாக சுரேஷ் சலேவின் உடல்நிலை மிக மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7 ஆம் திகதி நள்ளிரவு அவர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (ETU) அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சல்லே அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரைக் கொண்டு பலத்த பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு அவரது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை அருகில் சென்று பார்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக்காவில் இருந்த போது சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாக கூறுப்படும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பாக தொடர்பாக ; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்
இது ஒருபுறமிருக்க சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விமல் வீரவன்ச உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சலேவின் தாயார் ஆகியோர் இணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தீவிர சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஒரு நாட்டின் முன்னாள் யுத்த நாயகன் மற்றும் உளவுத்துறைத் தலைவரை இவ்வாறான அவலநிலைக்குத் தள்ளுவது சட்ட விரோதமானது என எதிர்க்கட்சிகள் கண்டனமும் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நீதிக்கான தேடலில் சுரேஷ் சலேவின் கைது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது சிறைக்குள் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும், வைத்தியசாலை அனுமதியும் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.













