சங்கீத்சன் பிணையில் வெளிவந்து விட்டார். ஆனால் அவர் வெளிவந்ததன் பின்னணியில் நிகழும் அரசியல் வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது ?
முதலாவதாக,அவரைக் கைது செய்தது போலீஸ்.அரசாங்கத்தின் போலீஸ்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.ஆனால் இறுதியிலும் இறுதியாக அவரைப் பிணையில் எடுத்தது அதே அரசாங்கத்தின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய இளங்குமரனின் சட்டத்தரணி. ஏற்கனவே கிளிநொச்சி,பரந்தனில் சில மாதங்களுக்கு முன்பு இளங்குமரன் ஒரு கிராம சேவகரை அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்போது, இளங்குமரனுக்கு ஆதரவாக வழக்காடிய அதே சட்டத்தரணிதான் இப்பொழுது சங்கீதசனின் விடயத்திலும் ஏனைய சட்டத்தரணிகளை முந்திக்கொண்டு பிணையில் எடுத்திருக்கிறார்.இத்தனைக்கும் அவர் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்,சிவில் சமூக,சட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்படும் ஒருவர்.
அரசாங்கமே கைது செய்கிறது.அரசாங்கமே பிணையில் எடுக்கிறது.அரசாங்கமே பிணையில் எடுக்கலாம் என்றால் ஏன் கைது செய்திருக்க வேண்டும்?அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் நாடாளுமன்றத்தில் பொறுப்பான அமைச்சர்கள் பேசும்போது தெரிவித்த கருத்துக்களுக்கு பொருள் என்ன? தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்ற பொருள்பட அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகின்றார். ஆனால் அவர் அவ்வாறு பேசிய சில நாட்களின் பின் சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்,அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார், சங்கீத்சன் தனது மக்களுக்காக எழுச்சிப் பாடல்களைத் தொடர்ந்து பாட வேண்டும் என்று. அதேசமயம் அவர் வாழும் மாவட்டத்தின் போருக்குப் பின்னரான நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து அதைக் குறித்தும் அவர் பாட வேண்டும் என்று அமைச்சர் பேசுகிறார்.
சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்ட அன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசேகரன் ஆற்றிய உரையின்படி, சங்கீத்சனின் குடும்ப நிலவரம் அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது என்று தெரிகிறது. சங்கீத்சனின் தகப்பன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்.இறந்து விட்டார்.பெண் தலைமை தாங்கும், மூன்று பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம்.தாயார் கிளிநொச்சியில் சந்தையில் ஒரு கடை வைத்திருக்கிறார்.அதேசமயம் கிளிநொச்சியில் தற்போது உள்ளூராட்சி சபையை நிர்வகிக்கும் தமிழரசுக் கட்சி அணியினருக்கு ஆதரவான பெண் அவர். சந்திரசேகரனுக்கு இந்த விபரங்கள் தெரிந்திருப்பதை அவருடைய நாடாளுமன்ற உரையில் இருந்து விளங்கிக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
அந்த உரையில் சந்திரசேகரன் ஒரு உண்மையை வெளியே கொட்டி விடுகிறார்.சங்கீத்சனை விடுதலை செய்யும் விடயத்தை கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டியாக அரசாங்கம் கையாண்டிருக்கிறது என்பதுதான்.தமிழ் மக்கள் மத்தியில் தனது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் உள்நோக்கத்தோடு அரசாங்கம் அந்த விவகாரத்தை கையாண்டு இருக்கிறது என்பதுதான்.
தனது உரையில் சந்திரசேகரன் சுமந்திரனுக்கு எதிராகவும் சிறீதரனுக்கு எதிராகவும் மறைமுகமாக தெரிந்தெடுத்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.” சுத்துமாத்து சட்டத்தரணிகள்”,”மதுச் சாலைகளை அதிகமாகக் கொண்ட மாவட்டம்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதன் மூலம் சந்திரசேகரன் தமிழரசுக் கட்சியின் இரண்டு அணிகளுக்கும் எதிராக கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கின்றார்.
தமிழரசு கட்சியின் இரண்டு அணிகளும் சங்கீத்சனை பிணையில் விடுவிக்க முன்பு அவரை அரசாங்கமே விடுதலை செய்தது என்று காட்ட வேண்டும் என்ற உள்நோக்கம், அவசரம் அரசாங்கத்திடம் இருந்திருக்கிறது. அதனால்தான் அரச நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன் சட்டத்தரணி மூலம் சங்கீத்சனை பிணையில் எடுத்திருக்கிறார்.
அதாவது ஒரு ராப் பாடகரை பிணையில் விடுவித்த விவகாரத்தில் யாருடைய உழைப்பு வெற்றி பெற்றது என்ற விடயத்தில் ஒருபுறம் தமிழரசுக் கட்சிக்குள் போட்டி. இன்னொரு புறம் தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அதாவது அரசாங்கத்துக்கும் இடையே போட்டி.எதற்கெல்லாம் உரிமை கோர வேண்டும்? எந்த வெற்றிக்கு உரிமை கோர வேண்டும்? எந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும்? என்ற விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது.
தனது மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாடகர் ஆயுதப் போராட்டத்தை மகிமைப்படுத்திய காரணத்துக்காக கைது செய்யப்பட்ட ஒரு பின்னணியில், அவரை விடுவிக்க வேண்டிய பொறுப்பு சிறிதரனுக்கு இருந்தது.ஒரு சட்டத்தரணியாக அந்த விடயத்தைச் சட்டபூர்வமாக கையாள வேண்டிய பொறுப்பு சுமந்திரனுக்கு இருந்தது.இரண்டு பேருமே தொழில்சார் அரசியல்வாதிகளாக தமது வாக்காளர்களுக்குப் பொறுப்புக் கூறியிருக்கிறார்கள்.இதில் வெற்றிக்கு உரிமைகோர என்ன இருக்கிறது? அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலை இப்படிப்பட்ட குட்டிக்குட்டி சடட வெற்றிகளைக் கொண்டாடும் அளவுக்கு தமிழரசுக் கட்சி தரம் தாழ்த்தி விட்டது.தமிழ்த் தேசிய அரசியலென்பது இப்படிப்பட்ட குட்டிக் குட்டி வெற்றிகளைக் கொண்டாடுவது தான் என்ற ஒரு நிலைமை வளர்ந்து வருவதன் பின்னணியில்,அரசாங்கம் தானும் அதைச் செய்து பார்க்கின்றது. அந்த வெற்றியைத் தான் சுவிகரித்துக் கொள்வதன் மூலம் தமிழரசுக் கட்சியை எப்படிப் பின்னுக்குத் தள்ளலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகளின் அதே முன்னுதாரணத்தை அரசாங்கமும் பின்பற்றுகிறது.
அதேசமயம் சங்கீத்சனைக் கைது செய்யும் உத்தரவைப் பிறப்பித்த அதே அரசாங்கம்தான் அவரைப் பிணையில் விடுவிக்கும் முடிவையும் எடுத்திருக்கிறது. அப்படியென்றால் அதைக் கைது செய்ய முன் யோசித்து இருந்திருக்க வேண்டும்.
சங்கீத்சன் ஆயுதப் போராட்டத்தை போற்றும் வரிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ இசைத்திருக்கிறார் என்பது உண்மை. அரசாங்கம் அவரை கைது செய்ததன்மூலம் அவருடைய பாடல்கள் பரவலாக கேட்கப்பட்டன; பார்க்கப்பட்டன.அதற்குமுன் அவருடைய பாடலைக் கேட்டிராத அவரைத் தெரிந்திராத பலரும்,கைது செய்யப்பட்ட பின் அவரைத் தேடித் தேடிக் கேட்டார்கள்;பார்த்தார்கள்.விடுதலைப்புலிகள் இயக்கத்தை மகிமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பாடல்கள் அமைந்திருந்தன என்று அரசாங்கம் முதலில் குற்றம்சாட்டியது. ஆனால் அதே அரசாங்கத்தின் வட பகுதிக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகிறார்,அவர் எழுச்சிப் பாடல்களைத் தொடர்ந்து பாட வேண்டும் என்று.அதேசமயம் தன்னைச் சுற்றிலும் உள்ள யதார்த்தத்தையும் பாட வேண்டும் என்று.
எனவே தொகுத்துப் பார்த்தால் தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கிறது.தமிழ் அரசியல் குழம்பிய,கலங்கிய குட்டையாக உள்ளது.அந்தக் குழம்பிய குட்டையில் யார் மீன்பிடிப்பது என்பதுதான் இப்பொழுது போட்டியாக உள்ளது. சங்கீத்சன் இந்த சீரழிந்த போக்கை தனது ரப் பாடலில் பாடியிருக்கிறார். கூர்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.ஆனால் அதே அரசியல்வாதிகள் அவருடைய விடுதலைக்காக உழைத்திருக்கிறார்கள் என்பது ஒரு கால முரண்.கலை முரண்.
உயிருடன் இல்லாத ஒரு முன்னாள் இயக்கத்தவரின் மகனை, பெண் தலைமை தாங்கும் குடும்பத்தின் பிள்ளையை, பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு பிள்ளையை, துணிந்து தன் தகப்பனின் அரசியலை போற்றிய ஒரு பிள்ளையை, அவருடைய குடும்பத்தை, தன் பக்கம் எப்படிக் கவர்ந்து இழுப்பது என்று அரசாங்கம் சிந்திக்கிறது என்பதைத்தான் நாடாளுமன்றத்தில் சந்திரசேகரன் ஆற்றிய உரை உணர்த்துகிறது.
தேசியவாத அரசியல் என்றால் என்னவென்று தெளிவான அரசியல் தரிசனமின்றி தனக்குள் தானே மோதிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிற்குள் தானும் புகுந்து விளையாடலாம் என்று தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது. தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை ஆகப்பெரிய திரளாக, உருகிப்பிணைந்த திரளாகக் கூட்டிக்கட்டுவது. தமது சொந்தக் கட்சியையே ஒரு திரளாகக் கூட்டிக்கட்ட முடியாத அரசியல்வாதிகள் அதை எப்படிச் செய்வார்கள்?
இப்படிக் குட்டிக் குட்டிச் சட்ட வெற்றிகளுக்கு உரிமை கொண்டாட மட்டும்தான் அவர்களால் முடியுமா?சட்ட வெற்றிகளால் ஒரு தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது.கட்ட வெற்றிகளால் மட்டும் ஒரு தேசத் திரட்சியை பாதுகாக்கவும் முடியாது.சங்கீதன் பாடியதே சட்டத்துக்கு மறுப்பாக எழுந்த ஒரு போராட்டத்தைத்தான்.உலகில் எல்லாப் போராட்டங்களுமே சட்ட மறுப்புத் தான். ராப் பாடல் மரபும் ஒருவிதத்தில் சட்ட மறுப்புத்தான். ஆனால் சட்ட மறுப்பாக மேலெழுந்த ஒரு போராட்டத்தைப் பாராட்டிய பாடகரை பிணையில் எடுத்துவிட்டு, அந்தச் சட்ட வெற்றிக்கு ஆளுக்காள் உரிமை கொண்டாடுகிறார்கள்.
இத்தனைக்கும் சங்கீத்சன் பிணையில் வெளியே வரக் காரணம், தனிய அரசியல்வாதிகளின் செயற்பாடு மட்டுமல்ல.அதற்குமப்பால் அவருக்கு ஆதரவாக நாட்டுக்குள் போராட்டங்கள் எழுந்தன.தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்களச் செயற்பாட்டாளர்களும் அவருக்கு நீதி கேட்டுப் போராடினார்கள். நாட்டுக்கு வெளியிலும் தமிழகத்தில் அமைச்சர் வன்னியரசுவும் ராப் பாடகர் வேடனும் அந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆங்காங்கே போராடினார்கள்.இந்த எல்லாப் போராட்டங்களிலும் விளைவாகத்தான் பாடகரைப் பிணையில் விடுவிக்க வேண்டி வந்தது.பரவலான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி அது. அதேசமயம் தமிழ் அரசியல் வாதிகளின் சீரழிவை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்திய ஒரு விவகாரமும் அது.














