டொலர் வருமானத்தை அதிகரிக்கும் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்காக, ஆடைக் கைத்தொழில் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய விரைவான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, இந்நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறையின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், தொழிற்சாலைகளை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும், அதற்காக ஒன்றிணையுமாறும் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
வற் (VAT) வரி முறைமை காரணமாக உள்நாட்டு மூலப்பொருள் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தி, அதற்கு வழங்கக்கூடிய ஏனைய சலுகைகள் குறித்த முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தார்.. சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்துதல் மற்றும் கோட்டா அளவுகளை அதிகரிப்பதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
முறையற்ற வழிகளில் ஈட்டப்படும் செல்வம் இந்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக, சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.













