வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலையும் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.
இந்திய மக்களின் சார்பாக, வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இக்கட்டான இச்சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்.
சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது – என்று கூறியுள்ளார்.
வெனிசுலாவின் தலைநகரான கராகஸுக்கு அருகிலுள்ள பகுதியில் புதன்கிழமை மாலை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், புதன்கிழமையன்று வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அவசரநிலையை அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.














