2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் திங்கட்கிழமை இரவும் (இலங்கை நேரப்படி இன்று காலை) தொடர்ந்தன.
டல்லாஸ் அரங்கத்தில் நடந்த போர்த்துக்கல் அணிக்கு எதிரான போட்டியில் கூடுதல் நேரத்தில் மிக்கேல் மெரினோ அடித்த கோல், ஸ்பெய்னுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்ததுடன், 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிக்கும் தகுதி பெறவும் வழிவகுத்தது.
ரோட்ரி தலைமையிலான ஸ்பெய்ன் அணி அடுத்து காலிறுதி ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அரங்கில் பெல்ஜியத்தை எதிர்கொள்ளும்.
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐரோப்பிய கால்பந்து உலகின் இரு பெரும் அணிகளுக்கு இடையிலான 42 ஆவது மோதலாகும்.
அத்துடன், இத்தகைய முக்கியக் களத்தில் நடைபெறும் மூன்றாவது சந்திப்பும் இதுவாகும்.
இவர்களுக்கிடையிலான முதல் மோதல் 2010-ல் நடைபெற்றது, அதில் ஸ்பெய்ன் அணி வெற்றி பெற்றது; அதனைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் குழுச் சுற்றுகளில், விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
மிக அண்மையில் 2025 UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின; ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலை நிலவிய நிலையில், பெனால்டி முறையில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முதன்முறையாகப் பங்கேற்கும் கேபோ வெர்டே (Cabo Verde) அணியுடனான தொடக்க ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக சமநிலை கண்ட பின்னர், ஸ்பெய்ன் அணி சிறப்பாக மீண்டு வந்து அடுத்த மூன்று ஆட்டங்களில் மொத்தம் எட்டு கோல்களை அடித்துள்ளது.
மிக முக்கியமாக, இந்தத் தொடரில் இதுவரை அந்த அணி ஒரு கோலைக் கூட விட்டுக்கொடுக்கவில்லை.
இதேபோல், போர்த்துக்கல் அணியும் கொங்கொ குடியரசுடனான தொடக்க ஆட்டத்தை எதிர்பாராத வகையில் சமன் செய்தது.
மேலும், உஸ்பெகிஸ்தானை வென்றபோதிலும், கொலம்பியாவுக்கு எதிரான சமன் அவர்களைத் தங்கள் குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க வைத்தது.
அவர்களின் 32-வது சுற்றுப் போட்டியில், பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து குரோஷியாவை வீழ்த்துவதற்கு மனவுறுதியும் விடாமுயற்சியும் முக்கியப் பங்காற்றின.
இந்த நிலையில் டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடந்த ஒரு பரபரப்பான ஆட்டத்தின் முடிவை, மாற்று வீரர் மிக்கேல் மெரினோ கூடுதல் நேரத்தில் அடித்த கோல் தீர்மானித்தது.
இதனால் போர்த்துக்கல் ஸ்பெய்னிடம் 1:0 என்ற கணக்கில் வீழ்ந்தது.
போர்த்துக்கல் அணிக்காக தனது கடைசி உலகக் கிண்ண ஆட்டத்தில் ஆடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெய்ன் லாஸ் ஏஞ்சல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.














