இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்துள்ளது.
நேற்று ஆரம்பமான இந்த வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 1,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் குழுவிற்கும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (05) மதியம் 1 மணியளவில் இந்த மோதல் வெடித்தது.
பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘பூரு மூனா’ என்பவனுடன் நெருங்கிய தொடர்புள்ள, சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரனே இந்த வன்முறைக்குத் தலைமை தாங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குள் நடந்த காட்டிக்கொடுப்பு தொடர்பான ஒரு சம்பவமே இந்த இருதரப்புப் பகைக்குக் காரணமாகும்.
நேற்று நடந்த ஆரம்பக்கட்ட மோதல்களில் 2 கைதிகள் உயிரிழந்ததோடு, 38 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலைக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இன்று காலை கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்றபோது, மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது.
ஆக்ரோஷமடைந்த கைதிகள், சிறை அதிகாரிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கினர்.
அதிகாரிகள் பிரதான வாயிலை நோக்கி ஓடியபோது, கைதிகள் அவர்களைத் துரத்திச் சென்று, சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயன்றனர்.
இதன்போது அதிகாரிகள் தற்காப்புக்காகக் குறைந்தபட்ச பலத்தைப் பிரயோகித்துக் கைதிகளைக் கட்டுப்படுத்தினர்.
கைதிகள் சிறையிலுள்ள விசேட அறைகளின் சுவர்களை உடைத்து, அங்கிருந்த விசேட கைதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதேநேரம், மற்றொரு குழுவினர் போதையேறும் நோக்கில் சிறை மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டனர்.
இன்று காலை மீண்டும் வெடித்த கொடூர மோதலில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், காயமடைந்த சுமார் 100 பேர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த 13 கைதிகள் அவசரமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கைதிகள் கட்டுப்பாட்டை மீறி வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் சுற்றியுள்ள காவல் நிலையங்களின் அதிகாரிகள் முழுமையாகக் களமிறக்கப்பட்டனர்.
சிறைக்குள் நிலவும் அசாதாரண சூழலைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை களமிறங்கியுள்ளது.
சம்பவ இடத்திற்கு 02 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஒரு பெல் 412 (Bell 412) ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறைக்கு ஆதரவாக, சிறையிலிருந்த பெண் கைதிகளும் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆக்ரோஷப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், சிறைக்கு வெளியே திரண்டிருந்த கைதிகளின் உறவினர்கள், தங்களுக்கு உரியத் தகவல்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அமைதியற்ற முறையில் நடந்துகொண்டனர்.
பின்னர் பொலிஸார் தலையிட்டு, மருத்துவமனையில் உள்ள கைதிகளைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கினர்.
தற்போதைய பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையிலுள்ள ஒரு தொகுதி கைதிகளை உடனடியாகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறை வரலாற்றில் இதற்கு முன்னர் 2012 நவம்பர் 9 அன்று வெலிக்கடை சிறையில் கைபேசிகள் மற்றும் போதைப்பொருட்களைத் தேடச் சென்ற பாதுகாப்புப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.
உலகளவில் பேசப்பட்ட அந்தச் சர்ச்சைக்குரிய கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக, 2022 ஜனவரியில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையர் எமில் ரஞ்சன் லமஹேவாவுக்குக் கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நீர்கொழும்பு சம்பவமும் அதே போன்றதொரு அதிர்வலையே தற்போதும் ஏற்பட்டுள்ளது.











