முன்னாள் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரும், எழுத்தாளருமான அன் விட்கொம்ப் (Ann Widdecombe) மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், யாரையும் முன்கூட்டியே குற்றவாளியாக கருதாமல் அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொ*லைச் சம்பவம் தொடர்பாக யோர்க்ஷயர் பகுதியில் 28 வயதுடைய வெள்ளையின பிரித்தானிய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை சனிக்கிழமை ரோதர்ஹாம் பகுதியில் இடம்பெற்றதாக உதவி தலைமை பொலிஸ் அதிகாரி மாட் லோங்மன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகவோ அல்லது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவோ இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தக் கொ*லை தொடர்பாக வேறு எவரையும் தற்போது தேடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு உதவும் வகையில் பொலிஸார் வெளியிட்ட தகவல் கோரிக்கைக்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 120க்கும் அதிகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன் விட்கொம்ப், டார்ட்மூர் பகுதியில் உள்ள ஹெய்ட்டர் (Haytor) இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் புதன்கிழமை பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது, அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்களுக்கு முன்பே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.















