நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் குஷானி ரோகணதீர அறிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்தின் போதே இந்த நாடாளுமன்ற வாரத்திற்கான விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற வாரத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (21) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விவாதம் மற்றும் ஒப்புதலுக்காக இரண்டு முக்கிய விசேட தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் திட்டம் தொடர்பாக, பொதுக் கணக்குகள் குழு (COPA) நடத்திய விசாரணை அறிக்கையை மேலதிக நடவடிக்கைக்காகச் சட்டமா அதிபருக்குப் பரிந்துரைக்கும் தீர்மானம்.
பொது நிறுவனங்கள் மீதான குழு (COPE) நடத்திய விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் உண்மைகளை, தேவையான சட்ட நடவடிக்கைக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குப் (CIABOC) பரிந்துரைக்கும் தீர்மானம்.
இதனைத் தொடர்ந்து, அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொது மனுக்கள் மீதான குழுவின் செயல்பாட்டின் அடிப்படையிலான சபை ஒத்திவைப்பு நேர விவாதம் இடம்பெறவுள்ளது.
புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின் பெரும்பகுதி நேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்ட வாய்மொழி பதில்கள் தேவைப்படும் 50 கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலையான கட்டளைகளின் கீழான கேள்விகளுக்கும், சபை ஒத்திவைக்கப்படும் நேரத்திலான கேள்விகளுக்கும் அன்றைய தினம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அமர்வின் போது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இரண்டு சிறப்பு அரசிதழ் ஒழுங்குமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஆளுந்தரப்பால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத் தீர்மானமும் விவாதிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை,நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினத்தின் அமர்வு நிறைவடைவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத் தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












