ஹார்முஸ் நீரிணைப் பாதையின் மீதான ஈரானின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்கா போராடி வரும் நிலையில், அப்பாதையில் செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்கள் மீதும் 20% கட்டணம் விதிக்கப்படும் என்று விடுத்திருந்த அச்சுறுத்தலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.
ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, அந்தக் கட்டணத் திட்டத்திற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியின் போது உரையாற்றிய ட்ரம்ப், அவர்கள் (ஈரான்) பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால், அடுத்த வாரம் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் குறிவைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த பல மாத கால மோதல்களுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட, ஏற்கனவே பலவீனமாக இருந்த போர்நிறுத்த ஒப்பந்தம், கடந்த வாரம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல்கள் வெடித்ததால் சீர்குலைந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த நீரிணையை மீண்டும் மூடியுள்ளதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜோர்தானில் உள்ள அஸ்ராக் (Azraq) தளத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய இராணுவம் புதன்கிழமை (15) அதிகாலை தெரிவித்தது.
இது குறித்து பென்டகனிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
அத்துடன், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியது.
ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டு வருவதாக குவைத் இராணுவம் கூறியதுடன், அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த மோதல் தீவிரமடைந்திருப்பது, ஈரானின் அண்டை நாடுகளையும் உள்ளடக்கி, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள இந்தப் போருக்கு, கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்குமா என்ற சந்தேகங்களை அதிகரித்துள்ளது.












