நியூஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இறுதி வேளையில், லியோனல் மெஸ்ஸியும் லமின் யமாலும் மனமுருகி ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.
இது, கால்பந்து உலகின் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியம் கைமாறும் ஒரு அடையாளப்பூர்வ நிகழ்வாகப் பலராலும் பார்க்கப்பட்டதுடன், அந்த இரவின் நிறைவாகவும் அமைந்தது.
கூடுதல் நேரத்தில் நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினாவை ஸ்பெய்ன் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டத்தின் 97-வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஃபெர்ரான் டோரஸ் (Ferran Torres), வெற்றியைத் தீர்மானிக்கும் கோலை அடித்து கால்பந்து உலகில் மிகப்பெரிய பட்டத்தை இரண்டாவது முறையாக ஸ்பெய்ன் அணி கைப்பற்றுவதற்கு வழி அமைத்தார்.
இந்த ஆட்டத்தின் இறுதி விசில் ஒலித்தபோது, மெஸ்ஸி மற்றும் யமால் ஆகியோருக்கு இடையிலான நெகிழ்ச்சியான தருணம் அந்தச் சூழலின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
போட்டியின் முடிவில், இளம் வீரரான லமின் யமால் ஓடி வந்து, கண்ணீர் மல்கிய லயோனல் மெஸ்ஸியைக் கட்டித் தழுவினார்.
மைதானத்தில் இருவரும் அன்புடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு சிறிது நேரம் உரையாடினர்.

2007 இல் யுனிசெஃப் (UNICEF) நடத்திய புகழ்பெற்ற புகைப்பட அமர்வில் குழந்தையாக இருந்த யமால் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதிலிருந்து அவர்களுக்கு இடையே உள்ள தனித்துவமான பிணைப்பு காரணமாக, இந்தத் தருணம் ரசிகர்கள் மத்தியில் மிக விரைவாக வைரலானது.
மெஸ்ஸியைப் பொறுத்தவரை, இந்தத் தோல்வி மற்றொரு மறக்கமுடியாத உலகக் கிண்ணத் தொடரின் முடிவாக அமைந்தது.
அதேவேளையில், மூன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற வரலாற்றின் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் 39 வயதான அவர் பெற்றார்.
மறுபுறம், வெறும் 19 வயதிலேயே கால்பந்து உலகின் மிகவும் மதிப்புமிக்க கிண்ணத்தை வென்றதன் மூலம், யமால் தனது இளம் வயது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைச் கொண்டாடியதுடன், ஒரு புதிய உலகளாவிய நட்சத்திரத்தின் வருகையையும் பறைசாற்றினார்.


















