கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இருந்த கிடங்கு ஒன்றில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான நவீன ஸ்மார்ட்போன்கள் வலனா ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத கைபேசி இருப்புகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் போது, அதிநவீன ஐபோன்கள உட்பட 300-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற ஸ்மார்ட்போன்கள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கைபேசிகளின் மொத்தச் சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசேட சோதனையானது உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) ரோகன் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையில், வலனா ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இவை நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதா மற்றும் இதற்குப் பின்னணியில் உள்ள ஏனைய கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.














