பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மூவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது.
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவை காலி, பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக, அவரது மனைவி மதுஷிகா மதுவந்தியிடமிருந்து பணம் கோரியதாகவும், பெற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, குறித்த மூவரும் கடந்த ஜூன் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) தகவலின்படி, இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, அவரை வேறு சிறைக்கு மாற்றுவதற்காக 500 மில்லியன் ரூபாய் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்தத் தொகை 200 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டதாகவும், அதில் 120 மில்லியன் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் சந்தேகநபர்களை ஜூலை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், அன்றைய தினம் பிணை மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையையடுத்து மூவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.












