ஐந்து மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே ஈரானுக்குக் கிடைத்துள்ள “இறுதி வாய்ப்பு” என்று எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக திங்களன்று (03) தெரிவித்தார்.
ஆனால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை அல்லது அதற்கான திட்டமும் இல்லை என்று ஈரான் மறுத்தது.
முரண்பாடான இந்தக் கருத்துகள், இப்போதைக்கு அப்போருக்கு ஓர் இராஜதந்திரத் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதையே உணர்த்துகின்றன.
ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுடான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.
ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளின் பேரில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் (ஈரான்) ஒரு நல்ல ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தத் தான் அளித்திருந்த அனுமதியை இரத்து செய்வதாக இந்த வார இறுதியில் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகக் கூறி அவர் இந்த முடிவை எடுத்தார்.
பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதாக உறுதியளித்துவிட்டுப் பின்னர் அவற்றை இரத்து செய்யும் தனது வழக்கமான பாணியையே அவர் இதிலும் பின்பற்றியுள்ளார்.
எனினும், திங்கட்கிழமை முன்னதாக, அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்றும், எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.
வரும் நாட்களில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்பதற்கோ அல்லது பேச்சுவார்த்தையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கோ ஈரானுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஈராக்கில் மத யாத்திரை சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைத் தவிர, ஏனைய அனைத்து ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களும் தற்போது நாட்டில்தான் உள்ளனர் என்றும் பாகாயி மேலும் கூறினார்.
ஹார்முஸ் நீரிணையின் மேலாண்மை குறித்து ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடப்படவில்லை என்றும், இந்த வார இறுதி வரை அராக்சி கிடைக்கமாட்டார் என்றும் ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை தொடர்பான ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதை விட, நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதே அதிக செலவு பிடிக்கும் என்பதை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உணர்த்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக வளைகுடா நாட்டு அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
இதற்காக, மத்திய கிழக்கின் வர்த்தகப் பாதைகள், கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றை மோதலின் செலவை படிப்படியாக அதிகரிக்கும் அழுத்தக் கருவிகளாக மாற்றி, வொஷிங்டனை விட நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று ஈரான் நம்புகிறது.














