இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், பிசிசிஐ-யின் சிறப்புத் திறன் மையத்தின் (Centre of Excellence) தற்போதைய தலைவருமான வி.வி.எஸ். லக்ஷ்மன், இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியப் பொறுப்பு ஒன்றை ஏற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் முக்கியப் பதவிகளில் மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தயாராகி வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மூத்தோர் தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடையவுள்ள நிலையில், தேசிய அணியின் பயிற்சியாளர் கட்டமைப்பும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருவதால், பிசிசிஐ சில முக்கிய மாற்றங்களைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு பிசிசிஐ-யின் கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அகர்கரின் பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை பிசிசிஐ நீட்டிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை, பெங்களூருவில் உள்ள சிறப்புத் திறன் மையத்தில் லக்ஷ்மன் தற்போது வகித்து வரும் பொறுப்புகளைக் கணிசமாக விரிவுபடுத்துவதாக அமையும்.
அங்கு அவர் வீரர்களின் திறன் மேம்பாடு மற்றும் உயர்திறன் செயல்பாட்டுத் திட்டங்களைக் கவனித்து வருகிறார்.
இந்த நியமனம் அல்லது முன்மொழியப்பட்ட அந்தப் பணியின் துல்லியமான கட்டமைப்பு குறித்து பிசிசிஐ-யிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
லக்ஷ்மன் ஏற்கனவே மூத்த அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்; தேவைப்படும்போதெல்லாம் இடைக்காலப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
மிக அண்மையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கௌதம் கம்பீருக்கும் அவரது வழக்கமான உதவியாளர் குழுவினருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இளம் இந்திய அணியை வழிநடத்தி சிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல உதவியமையும் குறிப்பிடத்தக்கது.







