ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி 29 அமெரிக்கப் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, அந்நிறுவனம் 18 பில்லியன் டொலர் வரை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தற்போது நிலுவையில் உள்ள வழக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக இருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எதிர்காலத்தில் இளம் பயனர்களுக்காகத் தனது தளங்களில் சிறப்பு மாற்றங்களைச் செய்ய மெட்டா உறுதியளித்துள்ளது.
அதன்படி, இளம் வயதினருக்கான தினசரி பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இரவில் செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த புதிய மேம்படுத்தல்கள் வரும் மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் கூறுகிறார்.
இந்த முடிவு குறித்துக் கருத்து தெரிவித்த மெட்டா, பெற்றோர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும் தாங்கள் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந்த சமரசம் மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறியுள்ளது.
டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற பிற முக்கிய சமூக ஊடகத் தளங்களும் தங்கள் பயனர்களுக்காக இதேபோன்ற கட்டுப்பாடுகளையும் பாதுகாப்புகளையும் செயல்படுத்த வேண்டும் என்று மெட்டா வலியுறுத்துகிறது.
18 பில்லியன் டொலர் தீர்வு ஒப்பந்தம், நிறுவனத்தின் நிதி வலிமையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மெட்டா நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 61 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது, மேலும் இந்தத் தீர்வு ஒப்பந்தம் குறித்த செய்தி, பங்குச் சந்தையில் அதன் பங்குகளை விண்ணை முட்டும் அளவிற்கு உயரச் செய்துள்ளது.















