மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த கூரே பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த கொட்டகையொன்றிற்குப் பின்னால் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (30) காலை 8.00 மணியளவில் குறித்த கொட்டகையின் உரிமையாளரால் இது அவதானிக்கப்பட்டு, 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பேரில் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி, முதற்கட்டக் கள ஆய்வை முன்னெடுத்தார்.
மீட்கப்பட்ட மனிதத் தலை விலங்குகளால் உண்ணப்பட்டு மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த அடையாளங்களைக் கண்டறியவும், இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் மொரட்டுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.















