தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் திகதிகளில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜூலை 26-ம் திகதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், 7 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















