முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை விஜயம் செய்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த குழுவினர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
“ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகிறார், நேற்றையதினம் (10) நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர்.
அதன்படி, அவர் இன்று கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என இலங்கை பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.














