இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி மனுக்களை (Tenders) இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையின் கீழ் உடனடி கேள்வி மனுக்களை (Spot Tenders) செயற்படுத்தியதன் ஊடாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக, முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.














