கொல்கத்தா மற்றும் குவஹாத்தி இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று அந்நாட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (01) புது டெல்லியில் தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தின் ஹவுராவிற்கும் அசாமின் குவஹாத்திக்கும் இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் கட்டணம் விமானப் பயணத்தை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் கூறினார்.
இந்த ரயில் சேவைகள் அடுத்த 15-20 நாட்களில் அதாவது ஜனவரி 18 அல்லது 19 ஆம் திகதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அது தொடர்பான உறுதியான திகதியை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது சோதனை மற்றும் பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.
முதல் சேவை குவஹாத்தி மற்றும் கொல்கத்தா இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான இரவு நேரப் பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீண்ட பயணங்களின் போது பயணிகளின் வசதியை மேம்படுத்த நவீன பெட்டிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இந்த ரயிலில் உள்ளன.















