இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.
கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக் கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக் கொண்டாடியது.
ஆனால் அதே நாளில்,கிளிநொச்சியில்,மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.அது சுதந்திர நாள் அல்ல கரிநாள் என்று பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளும் இணைந்து அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தின. அதே நாளில் பிற்பகல் யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில்,ஒரு கருத்தரங்கை சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஒழுங்குப்படுத்தியிருந்தது.அக்கருத்தரங்கின் தலைப்பு “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”.
சிங்கள மக்கள் சுதந்திர நாள் என்று கொண்டாடுவதை ஏன் தமிழ் மக்கள் கரி நாள் என்று அழைக்கிறார்கள்? தமிழ் மக்கள் ஏன் அதனை சுதந்திர தினமாக கருதவில்லை? அதைவிட முக்கியமாக,அது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அதன் மெய்யான பொருளில் சுதந்திர தினம் தானா?
இல்லை. அண்மையில் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தது. பன்னாட்டு நாணய நிதியம் அல்லது உலக வங்கி ஓர் அரசாங்கத்தைப் பாராட்டுகிறது என்று சொன்னால் அதன் பொருள் என்ன? அந்த உலகளாவிய நிதி அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்படிவாக அந்த நாடு செயல்படுகிறது என்று பொருள்.அவ்வாறு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்ப்படியும் ஒரு நாடு பொருளாதார அர்த்தத்தில் தன்னை ஒரு சுதந்திரமான நாடு என்று அழைத்துக் கொள்ள முடியாது.இது முதலாவது.
இரண்டாவது,ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்,இந்த நாட்டின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99ஆண்டு கால குத்தகைக்கு வாங்கிவிட்டது.அதுபோலவே கொழும்பு துறைமுகத்திற்கு அருகே சீனா ஒரு துறைமுகப் பட்டினத்தைக் கட்டி வருகிறது.
இந்த பிராந்தியம் இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுவது.அவ்வாறு இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் ஒரு தீவில், இங்கிருந்து கிட்டத்தட்ட 400 கடல் மைல் தொலைவில் உள்ள மற்றொரு வெளிப் பிராந்தியப் பேரரசு ஆகிய சீனா பலமாக காலூன்றி விட்டது. இந்தியா அதனைச் சகித்துக் கொள்ளுமா? இல்லை. இந்தியாவும் தன் பிடியை இங்கு எப்படிப் பலப்படுத்தலாம் என்றுதான் சிந்திக்கும். யாழ்ப்பாணத்தின் தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியா சீனாவிடமிருந்து தன் வசப்படுத்திக் கொண்டு விட்டது. கச்சதீவையும் அம்பாந்தோட்டையைப்போல லீசிங்கில் கேட்டால் என்ன என்ற ஓர் உரையாடல் இந்திய உயர் மட்டத்தில் உண்டு என்று தெரிகிறது. தவிர மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே ஒரு பாலத்தை கட்டுவதும் இந்தியாவின் விருப்பம் என்று தெரிகிறது.
இவை இதனை காட்டுகின்றன? இந்தச் சிறிய தீவு இரண்டு பேரரசுகளின் இழிவிசைகளுக்குள் சிக்கியிருக்கிறது என்பதைத்தான்.அதாவது கலைத்துவமாகச் சொன்னால் இச்சிறிய தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பம். இந்த அப்பத்துக்குள் வாழும் ஓர் இனம் தன்னை மட்டும் இறமையும் சுதந்திரமும் உள்ளதாக எப்படிக் கருதிக் கொள்ளலாம்? இது இரண்டாவது.
மூன்றாவதாக,1948இல் இருந்து இன்றுவரையிலுமான 78ஆண்டுகால பகுதிக்குள் சரி அரை வாசிக்கும் கூடுதலான காலகட்டம் அதாவது 46 ஆண்டுகள் இலங்கைத் தீவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறுவது போல, காலனித்துவ ஆட்சிக்குப் பின் 1971 இலிருந்து இன்றுவரையிலும் இலங்கைத் தீவு அசாதாரண சட்டங்களால்தான் ஆட்சி செய்யப்படுகிறது. இவ்வாறு அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்கள் போல நடைமுறையில் உள்ள ஒரு சிறிய தீவு தன்னை சுதந்திரமான தீவு என்று அழைத்துக் கொள்ளலாமா?
இல்லை. சாதாரண சட்டங்களின் கீழ் இந்த நாட்டை ஆள முடியவில்லை என்பது இந்த நாடு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அந்த அசாதாரணச் சூழல் எவ்வாறு உருவாகியது? சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்,மலையக மக்கள் ஆகிய நான்கு மக்கள் கூட்டங்களும் கௌரவமான விதத்தில், பொருத்தமான விதத்தில் இந்தச் சிறிய தீவைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பதால்தான் நாட்டில் பல தசாப்த காலமாக அசாதாரண நிலை நிலவுகிறது.
சிங்களத் தலைவர்கள் கூறுவார்கள்,நாட்டில் ஜனநாயகம் உண்டு என்று. ஆனால் ஜனநாயகம் என்பது வாக்களிப்பு உரிமை மட்டுமல்ல.அதைவிட ஆழமான பொருளில், தீர்மானம் எடுக்கும் அதிகாரமும்தான். சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 22 ஆசனங்களைத்தான் இதுவரை பெற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் எப்படி தீர்மானத்தில் பங்கெடுப்பது?இதுதான் பிரச்சினையே.
இவ்வாறு சிங்கள மக்களைத் தவிர ஏனைய சிறிய மக்கள் கூட்டங்கள் அரசியல் தீர்மானங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதவர்களாகக் காணப்படும் ஒரு தீவு தன்னை இறமையுள்ளது என்றும் சுதந்திரமானது என்றும் அழைத்துக் கொள்ளலாமா?
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக, தங்களுக்கு அரசியல் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுத்தான் கடந்த 78 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். அவர்களை நசுக்குவதற்குத்தான் நாடு அசாதாரண சட்டங்களின் கீழ் தொடர்ச்சியாக ஆளப்பட்டு வருகிறது. எனவே தமிழ் மக்களின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சிங்கள மக்களும் நிம்மதியாக இருக்கமுடியாது;முஸ்லிம் மக்களும் நிம்மதியாக இருக்க முடியாது;மலையக மக்களும் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதுதான் கடந்த 78 ஆண்டுகால அனுபவம் ஆகும்.
அதிலும் குறிப்பாக கடந்த 78 ஆண்டுகளில் இலங்கைத் தீவில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வெளிநாட்டுப் படைகள் தரையிறங்கியுள்ளன. முதலாவது சந்தர்ப்பம் ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம். 1971 இல். இரண்டாவது சந்தர்ப்பம், 1987இல் வடமராட்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கையின் போது இந்தியா தனது விமானங்களை அனுப்பி உணவுப் பொதிகளை தமிழ்ப் பகுதிகளுக்குள் போட்டது.அங்கேயே இலங்கையின் இறைமை மீறப்பட்டு விட்டது. சுதந்திரம் சோதனைக்கு உள்ளாகி விட்டது.
அடுத்தது 2004 ஆம் ஆண்டு நோர்வையின் சமாதான முயற்சிகள்.இந்த முயற்சிகளின் போதும் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் குழு ஒன்று நாட்டுக்குள் இறங்கியது.அதுவும் படைப் பரிமாணத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்புத் தான்.
இவ்வாறு வெளிநாட்டுப் படைகள் அல்லது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் அல்லது ஐநாவின் சிறப்புத் தூதுவர்கள் நாட்டுக்குள் வருகிறார்கள் என்று சொன்னால் இந்த நாடு முழு அளவுக்கு சுதந்திரமாக உள்ளது என்று எப்படிக் கூறலாம்? திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலுமாக பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொழுதே விவகாரம் நாட்டுக்கு வெளியே போய்விட்டது.அதை இலங்கைக்குள் தீர்க்க முடியவில்லை.இது பன்னாட்டுத் தலையீட்டைக் காட்டுகிறது.இவ்வாறு பன்னாட்டு சமூகம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும்போது அந்த நாடு எப்படித் தன்னை சுதந்திரமான நாடு என்று கூறலாம்?
ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உலகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியிருப்பதை சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
அதைவிடக் குறிப்பாக,யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாகப் போற்றப்படுகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கக் கண்டத்துக்குப் போக முடியாது. போரை முன்னெடுத்த முக்கிய தளபதிகள் அமெரிக்கக் கண்டத்துக்கு அல்லது ஐரோப்பாவின் சில நாடுகளுக்குப் போக முடியாது.அப்படியென்றால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததன் மூலம் இந்த நாடு உறுதிப்படுத்திக் கொண்ட, பாதுகாத்துக் கொண்ட சுதந்திரத்தின் பொருள் என்ன?
எனவே கடந்த 78 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் படம் என்ன? சிங்கள மக்களும் சுதந்திரமாக இல்லை; தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் சுதந்திரமாக இல்லை. இலங்கைத் தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பம். இங்கே தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் இல்லை ; முஸ்லிம் மக்களுக்கும் இல்லை; மலையக மக்களுக்கும் இல்லை.












