கடந்த 2001-இல் நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை இரவு, மேபல் லேஷன் (Mabel Leyshon) என்ற 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.
காது கேளாத மேபல் லேஷன் (Mabel Leyshon) என்ற 90 வயது மூதாட்டி ஒலியை அதிகமாக வைத்திருந்ததால், வீட்டின் பின் ஜன்னல் வழியாக ஒரு கொலையாளி உள்ளே நுழைவதை அவர் கவனிக்கவில்லை.
இந்தச் சம்பவம் அமைதியான அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்தது.
அக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கலைத்துறை மாணவனான மேத்யூ ஹார்ட்மேன் (Mathew Hardman), மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
வெறும் கொலையோடு நிற்காமல், மூதாட்டியின் உடலை வேறொரு நாற்காலிக்கு மாற்றி, அவரது காலடியில் இரண்டு போக்கர்களை (Pokers) சிலுவை வடிவில் வைத்து ஒரு பாத்திரத்தில் அவரது இரத்தத்தை ஊற்றி குடித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இது ஒருவகை “சாத்தானிய சடங்கு” (Macabre ritual) போல இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த நாள் உணவளிக்க வந்த தன்னார்வலர் ஒருவரால் மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பாத்திரத்தின் விளிம்பில் இரத்தத்தினால் ஆன உதட்டு அடையாளங்கள் இருந்ததை தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.
ஒரு துல்லியமான நோக்கம் இல்லாததால், கிராமத்தில் இருந்த ஒவ்வொருவரும் சந்தேகிக்கப்பட்டனர்.
30 ஆண்டுகால அனுபவமுள்ள மூத்த பொலிஸ் அதிகாரிகள் கூட, இது தங்களின் வாழ்க்கையில் கண்ட மிகக் கொடூரமான காட்சி என வர்ணித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு முன்பு வரை, அந்த கிராம மக்கள் தங்கள் வீட்டு கதவுகளைப் பூட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், மேபலின் மரணம் அந்த நம்பிக்கையைச் சிதைத்தது.
பொலிஸாரே தங்கள் குடும்பத்தினரை இரவில் கதவுகளைப் பூட்டி இருக்குமாறு அறிவுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
25 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த “வேம்பயர்” பாணி கொலைச் சம்பவம் அக்கிராம மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக இருந்து வருகிறது.














