2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டிக்குப் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணம் முடிந்ததைத் தொடர்ந்து தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக சனத் ஜெயசூர்யா முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தலைமை பயிற்சியாளராக தனது ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்றாலும், டி:20 உலகக் கிண்ணப் போட்டியைத் தாண்டி அந்தப் பதவியில் தொடரும் எண்ணம் தனக்கு இல்லை என்று சனத் ஜெயசூர்ய உறுதிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
எவ்வாறெனினும், இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை.
2024 ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் தொடருக்கு சனத் ஜெயசூர்யா ஆரம்பத்தில் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமை பயிற்சியாளராக உறுதி செய்யப்பட்டார்.
அவரது பதவிக் காலத்தில், இலங்கை அணி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 74 போட்டிகளில் விளையாடி, 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்தது.
அதே நேரத்தில் இரண்டு போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.















