மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானதில், உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது.
அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது.
டிப்பர் வாகனம் தனது இயந்திரத்தின் மீது ஏறுவதைக் கண்ட உழவு இயந்திர சாரதி, சாமர்த்தியமாக கீழே குதித்துள்ளார்.
இதனால் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
எனினும், இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்களை இழுத்துச் செல்லும்போது போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.














