வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வலி.கிழக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்ற நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் , கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
அதனை பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , பொலிஸார் , நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த இரு இளைஞர்களில் ஒருவர் தொலைபேசியில் காணொளி செய்ய மற்றைய இளைஞன் தவிசாளரை அவதூறாக பேசி ,அநாகரிக வார்த்தைகளால் திட்டியும் நடந்து கொண்டார்.
அதனை அடுத்து அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் , யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த மன்று , இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.















