சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப் படைத் தளம் (RAF) மீதான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் அகரோத்திரி (RAF Akrotiri) விமானப் படைத் தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து உள்ளூர் மக்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் பிரித்தானிய அரசு காட்டிய மெத்தனப்போக்கு தங்களுக்கு “ஏமாற்றம்” அளிப்பதாக பிரித்தானியாவுக்கான சைப்ரஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிரித்தானிய அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் பிரித்தானியா குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சைப்ரஸ் தளத்தில் பாதுகாப்புக்காக ‘HMS Dragon’ என்ற அதிநவீன போர்க்கப்பல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்கப்பல் அடுத்த வாரம் வரை அங்கு சென்றடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் எனத் தெரிந்திருந்தும், ஏன் முன்னரே ஒரு போர்க்கப்பலை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
வார இறுதியில் நடந்த தாக்குதலில் தளத்திற்குச் சிறிய அளவிலான சேதமே ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கிலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சிறப்பு விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று இரவு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












