கார் விபத்தில் தனது மகளைப் பறிகொடுத்த தாய், குற்றவாளி வெறும் ஆறே மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் கார்டிஃப் (Cardiff) பகுதியில், 15 வயதான கீலி மோர்கன் (Keely Morgan) என்ற சிறுமி வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்தபோது, (Christopher West) கிறிஸ்டோபர் வெஸ்ட் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தார்.
அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் காரைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய கிறிஸ்டோபருக்கு, 2025 ஜூலை மாதம் 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்டு வெறும் ஆறரை மாதங்களே ஆன நிலையில், குற்றவாளி கிறிஸ்டோபர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவல் கீலியின் குடும்பத்தினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் “என் மகளின் மரணத்திற்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. ஒரு உயிரைப் பறித்தவருக்கு இவ்வளவு குறைவான தண்டனையா? இது அவளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம்” என கீலியின் தாய் சியான் மோர்கன் (Sian Morgan) தெரிவித்துள்ளார்.
அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கக் கோரி சியான் இணையவழி மனு (Petition) ஒன்றைத் தொடங்கினார்.
இதேவேளை, இதற்கு 10,000-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தண்டனைக் காலத்தை அதிகரிப்பதோடு, அத்தகைய குற்றவாளிகள் மீண்டும் வாகனங்களை ஓட்டுவதற்கு முன்னர் கடுமையான மறுமதிப்பீட்டுச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்துப் பேசிய பிரித்தானிய நீதித்துறை அமைச்சகம் (MoJ), “கீலியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தண்டனைகளைத் தனிப்பட்ட நீதிபதிகளே தீர்மானிக்கிறார்கள் எனவும் உரிமத்தின் (Licence) அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவற்றை மீறினால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டியும், இனிவரும் காலங்களில் மற்றுமொரு குடும்பம் இத்தகைய நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்பதற்காகவும், சியான் மோர்கன் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.














