இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உயிரிழந்த அதேவேளை, டில்லியிலும் குடியிருப்பு பகுதியில் தீ பற்றியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (மார்ச் 18) அதிகாலை திடீரென தீ பற்றியுள்ளது.
பின்னர் குடியிருப்பு முழுவதும் தீ பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
தீ பற்றியதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இதேவேளை, தீ பற்றிய வீட்டிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவாதாகவும் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்தது.
இதுவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல், டில்லி பாலம் பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் திடீரென தீப்பற்றியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்ற போதிலும் தீயில் கருகி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.













