கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (06) இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.
நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீர்மானித்து களமிறங்கியது.
எனினும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இதன்போது, கொல்கத்தா 3.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களை எடுத்து மோசமான தொடக்கத்தைப் பெற்றிருந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட், இரண்டாவது ஓவரில் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.
மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

இது அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கிடைத்த முதல் புள்ளியாகும்.
அதேநேரத்தில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மேலதிகமாக ஒரு புள்ளியை பெற்றதன் மூலம், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன.













