அமெரிக்கா – இஸ்ரேலுடனான போருக்கு ஒரு நிரந்தர முடிவு வேண்டும் என்று ஈரான் திங்களன்று கூறியதுடன், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் எதிர்த்தது.
அதேவேளையில், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான தனது செவ்வாய்க்கிழமை (07) இரவு காலக்கெடுவை ஈரான் பூர்த்தி செய்யாவிட்டால், அந்நாடு “முற்றிலுமாக அழிக்கப்படலாம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
மத்தியஸ்தரான பாகிஸ்தான் வழியாக அமெரிக்கா முன்வைத்த முன்மொழிவுக்குப் பதிலளித்த தெஹ்ரான், போர் நிறுத்தத்தை நிராகரித்ததோடு, போருக்கு நிரந்தர முடிவு கட்டுவது அவசியம் என்றும் கூறியதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணத்திற்கான நெறிமுறை, தடைகளை நீக்குதல் மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட 10 பிரிவுகளை ஈரானின் பதில் கொண்டிருந்ததாக அந்த அமைப்பு மேலும் கூறியது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட கட்டமைப்பு, உடனடிப் போர் நிறுத்தத்தையும், அதைத் தொடர்ந்து 15 முதல் 20 நாட்களுக்குள் ஒரு பரந்த அமைதித் தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் முன்மொழிந்ததாக, இந்த முன்மொழிவுகள் குறித்து அறிந்த ஓர் வட்டாரம் தெரிவித்தது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை திறக்க, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் (கிழக்கு பகல் நேரம்) தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அதன் மீது “நரகத்தைப்” பொழிவதாக அச்சுறுத்தியுள்ள ட்ரம்ப், ஈரானின் பதிலை நிராகரித்ததோடு, தனது காலக்கெடு இறுதியானது என்றும் கூறினார்.
இது குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப், ஈரானை ஒரே இரவில் முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்றும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் என்றும் கூறினார்.
ஈரானிய மின் நிலையங்களையும் பாலங்களையும் அழிப்பதாக அவர் சூளுரைத்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் ஒரு போர்க்குற்றமாக அமையும் அல்லது ஈரானின் 93 மில்லியன் மக்களை நிர்க்கதியாக்கும் என்ற கவலைகளை அவர் புறக்கணித்தார்.
இதற்குப் பதிலடியாக ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவத் தலைமையகம், ட்ரம்ப் மாயையில் இருக்கிறார் என்று கூறியதாக தெஹ்ரான் அரசு தொலைக்காட்சியில் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் அண்மைய கருத்துக்களுக்குப் பின்னர், ஈரானின் துணை விளையாட்டுத்துறை அமைச்சர் அலிரெஸா ரஹிமி, செவ்வாயன்று நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் மனிதச் சங்கிலி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் பாதையான ஹார்முஸை ஈரான் திறம்பட மூடியது.
உலகப் பொருளாதாரத்தின் மீதான இந்த நீர்வழியின் இறுக்கமான பிடியானது ஒரு சக்திவாய்ந்த பேரம் பேசும் கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெஹ்ரான் அதை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கத் தயங்குகிறது.
மேலும், நாட்டின் முன்னணி அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான, தெஹ்ரானில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது திங்கள்கிழமை அதிகாலையில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்குவதாகவும் ஈரான் அச்சுறுத்தியது.
இந்தத் தாக்குதலில் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையம் மற்றும் பிற வசதிகள் சேதமடைந்ததாக ஈரானின் வானா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.












