ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டு யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய லூனா டூகாட் எனும் இந்தத் யுவதி ஒரு பல்கலைக்கழக மாணவியாவார்.
அவர் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏனைய மாணவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்து, ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி கற்று வருகின்றார்.
இதற்கிடையில், கல்விசார் ஆய்வுப் பணிக்காக தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டன் சிங்கிமலை மலை உச்சியை ஏறுவதற்குச் சென்றுள்ளார்.
அதன்படி, நேற்று (06) காலை மலை உச்சியைப் பார்வையிடச் செல்வதாகக் கூறிவிட்டு வனப்பகுதிக்குள் சென்ற அவர், மீண்டும் திரும்புவதற்கான வழியைக் கண்டறிய முடியாமல் காட்டில் சிக்கியுள்ளார்.
பின்னர், அவர் இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸாருடன் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், பெரும் முயற்சிக்கு மத்தியில் சிங்கிமலைக் காடு ஊடாக மலை உச்சிக்குச் சென்றனர்.
அங்கு மலை உச்சியில் உள்ள பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்த அந்த யுவதியை அவர்கள் பாதுகாப்பாக மீட்டதுடன், காட்டிற்குள்ளேயே அவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கி ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
















