மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் , முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) இன்றைய தினம் (10) சாட்சியமளித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கு அமைய இன்றைய தினம் (10) காலை 9.30 மணியளவில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையான மன்னார் நகர சபையின் தவிசாளர் மதியம் 1.30 மணி வரையிலான சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு சாட்சியமளிக்க என்னை இன்றைய தினம் (10) அழைப்பு விடுத்திருந்தனர்.
குறிப்பாக, 51 சைனா பஜார் (China Bazar) கடைகளை வழங்கியதில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.
இதில் 49 கடைகள் முறையான கொள்வனவு நடைமுறை சட்டத்தை (சட்டம் 80:46) மீறி, எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மன்னார் நகரசபைக்கு சுமார் 5 கோடி 31 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் பரிசீலித்த போது, ஊழல் நடை பெற்றுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் (General Auditor) அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைக்காகவும், வாக்குமூலம் வழங்குவதற்காகவும் மீண்டும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு தேவையான சில மேலதிக ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை பெற்றுக் கொடுக்கவும், திருடப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பது எமது இலக்காகும்.என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.











