பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தமது செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வோருக்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 22) முதல் அமலுக்கு வந்துள்ளன.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அல்லது வேல்ஸ் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள், இன்று (ஏப்ரல் 22) முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பழைய ‘செல்லப்பிராணி கடவுச்சீட்டுகளை’ பயன்படுத்த முடியாது எனப் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளின்படி, நாய், பூனை மற்றும் கீரி (Ferrets) போன்ற செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வோர் இனி 4 மாதங்கள் வரையறை கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் புதுப்பிக்கப்பட்ட விலங்கு சுகாதாரச் சான்றிதழ், ஒரு தனிப்பட்ட வாகனத்தில் அதிகபட்சமாக 5 செல்லப்பிராணிகளை மட்டுமே அழைத்துச் செல்லல் , உரிமையாளர் அல்லாமல் வேறு ஒருவருடன் செல்லப்பிராணி பயணம் செய்ய வேண்டுமானால், உரிமையாளரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
குறித்த விதிமுறைகள் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் ‘அசிஸ்டென்ஸ் டாக்ஸ்’ (Assistance dogs) வகை நாய்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும்.
இதேவேளை, “ஐரோப்பிய ஒன்றியத்தில் வழங்கப்பட்ட பெட் பாஸ்போர்ட்டாக இருந்தாலும், அதனை இன்று முதல் பயன்படுத்த முடியாது எனவும் மீறிப் பயன்படுத்தினால் செல்லப்பிராணி ஐரோப்பிய எல்லைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்” எனவும் அரசாங்கத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே இனி அங்குக் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
அதேநேரம், பிரித்தானியாவிற்கு மீண்டும் திரும்பும் பயணிகளுக்கு பழைய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














