புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான சமாதான நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து, சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்களாபிதான மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சமாதான நடைப்பயணம் இலங்கையில் நடைபெறுவது, ஒரு நாடு என்ற வகையில் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோல், உலக சமாதானம் என்பது நம் அனைவரதும் பிரார்த்தனையாகும். அந்த வகையில், இந்நிகழ்வில் பங்குபற்றக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,
இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் குறித்து அரசாங்கம் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் விசாரணைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்கள் அறிவித்துள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சி அவசியமானது; ஆனால், எதிர்க்கட்சியிடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அவர்கள் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. இதனாலேயே அடிப்படை ஆதாரமற்ற விடயங்களை முன்வைத்து அரசாங்கத்தைச் சிரமப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர்கள் மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாகக் கூறினார்கள். எனது கருத்துகளை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும் வரை நானும் காத்திருக்கின்றேன்.
கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு, மருத்துவக் கல்வி தொடர்பிலும் ஒரு குழுவை நியமித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.














