இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்லே (Todd McClay) முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டொலர் முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆடை, துணி, தோல் பொருட்கள் மற்றும் பொறியியல் சாதனங்களுக்கு நியூசிலாந்து சந்தையில் நூறு சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 5,000 இந்திய பணியாளர்கள் நியூசிலாந்தில் தங்கிப் பணியாற்ற தற்காலிக விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பண்ணைப் பொருட்கள் மற்றும் சில விவசாயப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















